வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தொண்டு நிறுவனங்கள் கலந்தாய்வு கூட்டம்
கடலுார்: வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், கல்லுாரி முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், தொலைதொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசும் போது,'' தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள், வருவாய்த்துறையினர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். மீட்பு நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு உதவி புரிந்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளின் மின்சாதனப் பொருட்கள், மின்னாக்கி போன்றவற்றினை உயரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர், மருந்துப் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மழைக்காலங்களில் கட்டடங்கள் பாதிக்கப்படாத சூழ்நிலையில் பராமரித்திட வேண்டும். பழுது ஏற்பட்டால் அப்பகுதியினை பயன்படுத்தாமல் எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். தங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் தயார்நிலையில் வைத்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள், தனியார் மருத்துவமனை மற்றும் எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், தொலைதொடர்பு நிறுவனத்தினர், வணிகர்சங்கத்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.