உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு: போலி சித்த மருத்துவர் கைது

போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு: போலி சித்த மருத்துவர் கைது

கடலுார் : சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கில், திருச்சியை சேர்ந்த, போலி சித்த மருத்துவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில், கடந்த ஜூன் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்கள் கிடந்தன. இதுகுறித்து பல்கலை பதிவாளர் (பொறுப்பு) பிரபாகர், கிள்ளை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து போலி சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சிதம்பரம் மன்மதசாமி நகர் சங்கர்,37; கிருஷ்ணமூர்த்தி நகர் நாகப்பன், 50; அருட்பிரகாசம் ஆகியோர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, சித்தா படிப்பு ஆகிய சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்றது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.கடலுார் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில், போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர் சித்த மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அதில், 100 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியதில், 50 பேர் ஆஜராகி, தங்களின் சான்றிதழ்களை போலீசில் ஒப்படைத்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சித்த வைத்தியரும், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவருமான சுப்பையா பாண்டியன், 67; என்பவர், போலி சான்றிதழ் விற்றது தெரிய வந்தது.மேலும், சிதம்பரத்தை சேர்ந்த, தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் ஒஸ்டின் ராஜா என்பவரிடம் போலி சான்றிதழ்களை வாங்கி விற்பனை செய்துள்ளது தெரிந்தது. இதற்காக மாதந்தோறும் திருச்சியில் கூட்டம் நடத்தி, ஏஜென்டுகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை போலி சான்றிதழ்கள் விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை திருச்சி சென்று, சுப்பையா பாண்டியனை கைது செய்தனர். அவரது வீடு மற்றும் மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.அதில், சுப்பையா பாண்டியன் மற்றும் அவரது மனைவி சான்றிதழும் போலி என்பது தெரியவந்தது. அங்கு வழக்கு தொடர்பான 10க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சுப்பையா பாண்டியனை கடலுாருக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்புள்ளது தெரியவந்தது.இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள ஒஸ்டின் ராஜாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை