பாம்பு தீண்டி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே பாம்பு கடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு, நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42; விவசாயி. இவர் கடந்த 29ம் தேதி தனது வயலுக்கு உரங்களை எடுத்துச் சென்றார். அப்போது, அவரை பாம்பு தீண்டியது. உடன், மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, டாக்டர் மற்றும் ஆம்புலன்ஸ் இல்லாததால், உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திட்டக்குடி - சிறுபாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் இறந்தவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூ பாய் இழப்பீடு தொகை அறிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் கணேசன், இறந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாய் மற்றும் அவரது சார்பில் தனியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், வி.சி., மாவட்ட செயலாளர் திராவிடமணி, மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் உடனிருந்தனர்.