சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம்
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில், சாரண சாரணியர்களுக்கான கவர்னர் விருது தேர்வு முகாம் நடந்தது. முகாமில் சிதம்பரம் மற்றும் வடலுார் சாரண மாவட்டத்தின் சார்பில் 32 பள்ளிகளை சார்ந்த 137 சாரணர்களும் , 69 சாரணியர்களும், 35 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடந்த முகாமில் சாரண உறுதிமொழி, சட்டம், குறிக்கோள், பாடல்கள், முதலுதவி, மதிப்பீடு, நிலப்படக்கலை, முடிச்சுடுகள், கூடாரங்கள் அமைத்தல் போன்ற பாடத்திட்டத்தின் செயல்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் நடந்தன. தொடர்ந்து நடந்த முகாம் நிறைவு விழாவில், வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் சிதம்பரம் மாவட்ட சாரணத் தலைவர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், வடலுார் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், சாரணிய ஆணையர் சுகிர்தா தாமஸ் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சாரண செயலர் பாக்கியராஜ் வரவேற்றார். மாநிலத் தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட முதன்மைத் தேர்வாளர்கள் வேலாயுதம், வீரப்பா, உஷாராணி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று கவர்னர் விருதுகளுக்கான சாரண சாரணியர்களை தேர்வு செய்தனர். முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அன்புவேல், சுதாகர், நடராஜன், மதன்ராஜ், சோமசுந்தரம், சிவகுமார், வெங்கடேசன், ஜெயந்தி, கவிதா, கோமதி ஆகியோர் செய்திருந்தனர். வடலுார் மாவட்ட சாரண செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.