ராமநத்தம் பகுதியில் கனமழை 40 வீடுகளில் மழைநீர் புகுந்தது
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ராமநத்தம் அடுத்த ஆவட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் 3:30 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 5:00 மணி வரை இடைவிடாமல் பெய்த மழையால், கல்லுார் கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், ஆவட்டியில் கோவிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மீது மரம் மற்றும் மின்கம்பம் சாய்ந்தது. இதில், சரக்கு வாகனம் நொறுங்கியது. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மரம் முறிந்து சுற்றுச்சுவர் மீது சாய்ந்தது.