கிளிமங்கலம் சாலை அகலப்படுத்த கோரிக்கை
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இருந்து முருகன்குடி வழியாக கிளிமங்கலம் செல்லும் தார் சாலையைப் பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இச்சாலையை பயன்படுத்தி கிளிமங்கலம், குருக்கத்தஞ்சேரி, மோசட்டை, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, பாசிக்குளம், முதுகுளம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், செந்துறை பகுதிகளுக்கு செல்கின்றனர். அதில், கணபதிகுறிச்சியில் இருந்து கிளிமங்கலம் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையோர விளை நிலங்களில் கவிழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, கிளிமங்கலம் தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.