விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் நிலம் மீட்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் புறவழிச்சாலையோரம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, கம்பி வேலி போடப்பட்டது. விருத்தாசலத்தில் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக கடைகள், விளை நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதனை சிலர் வாடகைக்கும், ஆக்கிரமிப்பு செய்தும் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விருத்தாசலம்- சேலம் புறவழிச்சாலையொட்டி, கோவிலுக்கு சொந்தமான 2,590 சதுர அடி பரப்பு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, திருமண மண்டபம் கட்டினார். தகவலறிந்த அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு, கடந்த 2022ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஹிந்து சமய ஆணையர் நீதிமன்றத்தில் தனிநபர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பை அகற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன யுக்தியில் ைஹட்ராலிக் இயந்திரங்கள் உதவியுடன் திருமண மண்டபத்தை 20 அடி தொலைவிற்கு பின்புறமாக நகர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலியிடத்தை மீட்டு, கம்பி வேலி அமைத்திட கடலுார் இணை ஆணையர் ஜோதி உத்தரவிட்டார். அதன்படி, உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில், மீட்கப்பட்ட இடத்தில் கம்பிவேலி அமைத்து, எச்சரிக்கை பலகை பொறுத்தும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் மாலா, மேலாளர் பார்த்தசாரதி உடனிருந் தனர். விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.