நெல்லின் ஈரப்பதும் அளவை உயர்த்த மத்திய குழுவிடம் அமைச்சர் வலியுறுத்தல்
கடலுார்:நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது குறித்து, மத்திய குழுவிடம், அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.நெல்லின் ஈரப்பதம் குறித்து, ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று கடலுார் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில், குழுவினரை அமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்துவது குறித்து வலியுறுத்தினார்.பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் இயல்பை அதிக மழை பெய்தது. வெப்ப நிலையும் கடந்த 30 நாட்களாக 22 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும், காற்றின் ஈரப்பதம் சுமார் 88 சதவீதம் முதல் 92 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. பனிப்பொழிவும் அதிகம் உள்ளது.மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரையிலான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட அளவான 17 சதவீத ஈரப்பதத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகளால் நெல் கொடுக்க இயலாத நிலை உள்ளது.இதன் காரணமாக பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வலியுறுத்தியதன்பேரில் பல்வேறு மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய குழுவினர் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.