| ADDED : செப் 11, 2026 05:30 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப் பாலம் உள்ளது. பாலத்தின் ஒரு பகு தியை கடலுார் மாவட்ட நிர்வாகமும், மற்றொரு பகுதியை புதுச்சேரி அரசும் பராமரிக்கின்றன. கடலுார் பகுதி குடிமகன்கள் பாலத்தை கடந்து, புதுச்சேரி மாநில எல்லையில் மது அருந்தி வருகின்றனர். புதுச்சேரியின் ஆராய்ச்சிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக பாலத்தை கடந்து கடலுார் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகம் எதிரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளனர். ஆனால், கண்காணிப்பு கேமரா சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு சோத னைச் சாவடியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கேமரா பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனை பயன்படுத்தி, சமூக விரோதிகள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோரை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.