உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்  காத்திருந்த கடலை விவசாயிகள்

மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்  காத்திருந்த கடலை விவசாயிகள்

விருத்தாசலம் : விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், விதைக்கடலை வாங்க வந்த விவசாயிகள், நீண்டநேரம் காத்திருந்து அதிருப்தியடைந்தனர்.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் மூலம் ஆராய்ச்சி செய்து, விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. அதுபோல், மாவட்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சியும் தரப்படுகிறது.ஒவ்வொரு பருவத்திற்கு தகுந்தாற்போல விதைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, முதல்நிலை செயல்விளக்கத் திடல் திட்டத்தின் கீழ் வேர்க்கடலை விவசாயிகளுக்கு விதைக்கடலை வழங்கப்படுகிறது. அதன்படி, ஏக்கருக்கு 40 கிலோ வீதம் விதைகள் வழங்கப்படும்.இதற்காக, கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார், புகைப்படங்கள் வழங்கி, மண் மாதிரியுடன் விதைக்கடலை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த முதனை மற்றும் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை 10:00 மணிக்கு வந்த நிலையில், மாலை 3:00 மணி வரை, விதைக்கடலை வழங்காமல் காத்திருக்கச் செய்வதாக குற்றம் சாட்டினர்.தகவலறிந்து வந்த ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகளை சமாதானம் செய்தனர். அதில், இந்த சீசனுக்கு 250 ஏக்கருக்கு மட்டுமே விதைக்கடலை வந்துள்ளது. அக்., மற்றும் நவ., மாத பருவங்களில், தற்போது பெறப்படும் படிவங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனையேற்ற விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !