நிழற்குடை கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரி மறியல்
கடலுார் : கடலுார் அருகே பயணியர் நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடிக்கக் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் அடுத்த ராமாபுரம் ஊராட்சி, சாத்தங்குப்பம் கிராமத்தில் இருந்த பழைய பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு புதிய நிழற்குடை கட்டுமான பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், தனது இடத்திற்கு செல்லும் வழியில் நிழற்குடை அமைப்பதாக கூ றி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8:30மணிக்கு கடலுார்- நடுவீரப்பட்டு சாலை, சாத்தங்குப்பத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்ததை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று கிராம மக்கள் 9:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் செய்ததாக 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.