நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
பண்ருட்டி: பண்ருட்டியில், வீட்டுமனை பட்டா கேட்டு நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பண்ருட்டி களத்துமேடு ஏரி புறம்போக்கில் 120க்கும் மேற்பட்டவர்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். அந்த இடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி, கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை சார்பில் வீடுகள் வழங்கப்படவில்லை.இந்நிலையில் இங்கிருந்து வெளியேறியவர்கள் 48குடிசை வீடுகள் அமைத்து அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மின்துறை சார்பில் அப்பகுதியில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. இதனையடுத்து அப்பகுதி குடிசை வீடுகளில் வசித்து வந்த 48 குடும்பத்தினர். எங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் தங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது. எனவே வீட்டு மனைபட்டா வழங்க கோரி பாம்புடன் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்தை சந்தித்து முறையிட்டனர்.வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து தாசில்தார் ஏதும் கூறாததால், மாலை 5:15 மணியளவில் 50பெண்கள் நகராட்சி அலுவலக வாயில் முன்பு பாம்புடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.