சி.என்.பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க கோரிக்கை
நடுவீரப்பட்டு: குள்ளஞ்சாவடியிலிருந்து பண்ருட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சை சி.என்.பாளையம் வழியாக இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக குள்ளஞ்சாவடிக்கு அரசு பஸ் தடம் எண். 18 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை 9:30 மணிக்கு குள்ளஞ்சாவடியிலிருந்து புறப்பட்டு நடுவீரப்பட்டு, பாலுார் வழியாக பண்ருட்டிக்கு செல்கிறது.இந்த அரசு பஸ்சுக்கு 10 நிமிடத்திற்கு முன் தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பாலுார் வழித் தடத்தில் 6க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் சி.என்.பாளையம் பட்டீஸ்ரவம், நெல்லித்தோப்பு, சாத்திப்பட்டு வழியாக காலை 9:00 மணிக்கு பஸ் சென்று விட்டால் மதியம் 1:00 மணிக்குத்தான் மீண்டும் செல்கிறது.எனவே, காலை நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ் தடம் எண்.18ஐ சி.என்.பாளையம் வழியாக இயக்கினால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.