கடலுார் மாவட்ட நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மையம் ஏற்பாடு
கடலுார்: கடலுார் மாவட்ட நீதிமன்றங்களில் கடந்த 1ம் தேதி முதல், செப்., 30ம் தேதி வரை சிறப்பு சமரச தீர்வு முகாம் நடந்து வருகிறது.இதுகுறித்து மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட நிதிமன்றத்தில் இயங்கும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இயங்கும் சமரச மையங்களில் சிறப்பு சமரச தீர்வு முகாம் கடந்த 1ம் தேதி துவங்கியது.வரும் செப்., 30ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து தினமும் சிறப்பு சமரச தீர்வு மையம் மூலம் வழக்குகள் சமரசம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு வழங்கப்படுகிறது.சமரச மையத்தில் பயிற்சியும், அனுபவமும் மிக்க வழக்கறிஞர்கள் மத்தியஸ்தர்களாக இருந்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தி வழக்கில் தீர்வு காண உதவுகின்றனர்.சமரச தீர்வு முகாம் மூன்று மாதங்களும் நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீர்வு மையம் செயல்படும். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய வழக்காடிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வழக்குகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.