மொபைல் கேம் விளையாடிய மாணவர்கள் ரயில் மோதி பலி
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த குமார் மகன் தினேஷ், 16; ரவிக்குமார் மகன் அரவிந்த், 16; நண்பர்களான இருவரும், ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்றனர். இருவரும், நேற்று காலை, 11:40 மணிக்கு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற பயணியர் ரயில், இருவர் மீதும் மோதியது. இதில், தினேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்த்தை அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் இறந்தார்.ஏத்தாப்பூர் போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் இருவரும் மொபைல்போனில் கேம் விளையாடியபடி சென்றபோது, ரயிலில் அடிபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.