கனமழையால் தற்காலிக சாலை துண்டிப்பு; இரு மாவட்டங்களில் 40 கிராம மக்கள் பாதிப்பு
பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக பெண்ணாடம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டதால், இரு மாவட்டங்களில் 40 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே, பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், அங்கு தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டு, அதன் வழியாக அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று, கடலுார் மாவட்டம் பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கடலுார் - அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்வதும்; பின்னர் சாலை அமைத்து பயன்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.இதனால், வெள்ள காலங்களில் கடலுார்-அரியலுார் மாவட்டங்களை சேர்ந்த 40 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமல், முருகன்குடி மேம்பாலம் வழியாக 10 கி.மீ., துாரம், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.இருமாவட்ட மக்கள் கோரிக்கையேற்று, கடந்த 2018 அக்.,ல், அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியே 86 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் பணி முடிந்த நிலையில், இணைப்பு சாலை பணி மந்தமாக நடக்கிறது.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்த கன மழையில் ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீரால், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உள்ள தற்காலிக செம்மண் சாலை அடித்துச் செல்லப்பட்டது.இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இருமாவட்ட கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட கிராம இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்க இருமாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.