குடும்ப பிரச்னையில் விபரீதம் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை வேப்பூர் அருகே சோகம்
வேப்பூர் : வேப்பூர் அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண், இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாளிகை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி நித்யா, 24. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. அனிஷ், 5, கோபிகா, 2; ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.அன்பழகன் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அதேபோல, நேற்று காலை அன்பழகனுக்கும், நித்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர், அன்பழகன் வேலைக்கு சென்று விட்டார்.கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நித்யா, தனது 2 குழந்தைகளுடன் அப்பகுதியிலுள்ள கிராம பொது கிணற்றில் குதித்துள்ளார். இதில், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கிணற்றில் மிதந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.தகவலறிந்த வேப்பூர் போலீசார் உடல்களை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண், இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது