விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை லாரி உரிமையாளர்கள் முற்றுகை
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் ஆதரவுடன் கனரக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தாரர்கள் இயக்க பணிக்கு எங்களது லாரி உரிமையாளர்கள் சங்கத்தையும் பயன்படுத்த வேண்டும் என கடலுார் மாவட்ட கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போதைய தாசில்தார் உதயகுமார் தலைமையில் சமாதானக்கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.இந்நிலையில், விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கு முன் நேற்று பகல் 11:00 மணியளவில், சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் கழுத்தில் துாக்கு கயிறு மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதற்கு தீர்வு காணாவிட்டால் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு பாலக்கரை ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.