பேரூராட்சி ஊழியரை தாக்கிய வி.சி., கவுன்சிலர் கைது
புவனகிரி : புவனகிரி பேரூராட்சி அலுவலக இளநிலை உதவியாளரை தாக்கிய வி.சி., கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,35; இவர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். இவரிடம், புவனகிரி பேரூராட்சி 1வது வார்டில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு திட்டத்தில் செய்த பணி மேற்கொண்டதற்கான காசோலையை விடுவிக்குமாறு, சில நாட்களுக்கு முன் அந்த வார்டு வி.சி., கட்சி கவுன்சிலர் காளிமுத்து (எ) பாரதிதாசன்,38; கேட்டதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அலுவலகத்தில் ராதாகிருஷ்ணன் பணியில் இருந்த போது, காளிமுத்து காசோலை கேட்டதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காளிமுத்து, ராதாகிருஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பதிலுக்கு ராதாகிருஷ்ணனும் தாக்கினார். அருகில் இருந்த ஊழியர்களை இருவரையும் சமாதானம் செய்தனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.