கடலுார் மாவட்டம், பண்ருட்டி மற்றும் சுற்றுட்டார பகுதியில் மொத்தம், 30 ஆயிரம் எக்டர் பரப்பளவில் முந்திரி பயிரிடப்பட்டுள்ளது. இதனுடன், தென்னாப்பிரிக்கா, கானா, ஐ வேரிகோஸ்ட், உள்ளிட்ட நாடுகளில் இருந்து முந்திரி கொட்டைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கொட்டைகள் உடைக்கப்பட்டு உள்நாடு, வெளிநாடுகளுக்கு முந்திரி பயிர் ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பண்ருட்டியில், 15 ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும், 300க்கும் மேற்பட்ட முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், குடிசை தொழிலாக முந்திரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், முந்திரி தொழில் சார்ந்து இயங்கி வருகின்றனர். கடந்த, தீபாவளி பண்டிகைக்கு பிறகு முந்திரி பயிர்களின் தேவை குறைந்துள்ளதால் வியாபாரம் மந்தமாக உள்ளது. மேலும் அமெரிக்க வரி விதிப்பால் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. முந்திரி கொட்டைகள் விலை கூடியுள்ளது. ஆனால் கொட்டைகள் உடைத்து, பதப்படுத்தி சாப்பிட தயாராக இருக்கும் முந்திரி பயிர்கள் ரகங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. விலை மந்தம் காரணமாக முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையகளும், குடிசை தொழிலாக முந்திரி பதப்படுத்தும் நடுத்தர வியாபாரிகளும் நெருக்கடியில் உள்ளனர். வரும் 2026 தைமாதம் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பச்ச ரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, கரும்பு, சிறப்பு தொகை ஆகியவை வழங்கப்பட்டன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த, 2022 ம் ஆண்டு மட்டும் முந்திரி பருப்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கினர். பின் கடந்த 3 ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்புடன் முந்திரி பருப்பு வழங்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்புடன் முந்திரிபருப்பையும் இணைத்து வழங்க வேண்டும் என முந்திரி விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.