உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குழந்தை திருமணங்களை தடுக்க 1098 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்

குழந்தை திருமணங்களை தடுக்க 1098 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்

தர்மபுரி: குழந்தை திருமணத்தை தடுக்க, சைல்டு ஹெல்ப்லைன், 1098 என்ற கட்டணமில்லா எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி விடுத்துள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், போலீசார், கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, மருத்துவத் துறைகளுடன் இணைந்து, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், வளரிளம் பருவ கர்ப்பம், பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் போன்ற, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில், கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, ஒன்றிய அளவில், வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு, பேரூராட்சிகள் அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், கடந்த, 3 ஆண்டுகளில், 466 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல் வரப்பெற்று, 356 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. குழந்தை திருமணம் நடந்ததாக, 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் தெரிந்தால், சைல்டு ஹெல்ப்லைன், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ