ஒகேனக்கல்லில் 43,000 கன அடி நீர்வரத்து 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல்,ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விானடிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 13வது நாளாக அங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்கிறது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அங்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு, 7:00 மணிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.தொடர்ந்து, 13வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை போலீசார், மடம் செக்போஸ்டிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர்.