தர்மபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.31 சதவீதம் தேர்ச்சி
தர்மபுரி, தமிழகத்தில், நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில், 2024---25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 318 பள்ளிகளில் படித்த, 9,478 மாணவியர், 10,185 மாணவர்கள் என, 19,663 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளின் படி, 9,699 மாணவர்கள், 9,239 மாணவியர் என, 18,938 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 95.23, மாணவியரின் தேர்ச்சி சதவீதம், 97.48, மொத்த தேர்ச்சி சதவீதம், 96.31, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில், 28வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு, 19 இடங்கள் முன்னேறி, 9வது இடத்துக்கு சென்றுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம், 169 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.மாவட்டத்தில் மொத்தமுள்ள, 225 அரசு பள்ளிகளில் படித்த, 7,048 மாணவியர், 6,743 மாணவர்கள் என, 13,791 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளின்படி, 6,297 மாணவர்கள், 6,823 மாணவியர் என, 13,120 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.39, மாணவியரின் தேர்ச்சி சதவீதம், 96.81, மொத்த தேர்ச்சி சதவீதம், 95.13.அரசு பள்ளிகள் தரவரிசையில், கடந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில், தர்மபுரி மாவட்டம், 27வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, 20 இடங்கள் முன்னேறி, 7வது இடத்துக்கு சென்றுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறுகையில்,'' திருப்புதல் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது, அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால்தான், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது,'' என்றார்.