ஆணைமடுவு அணை கட்டும் திட்டம்; நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடியிலிருந்து, 7 கி.மீ., தொலைவில், ஏற்காடு அடிவாரத்தில் ஆணை மடுவு அமைந்துள்ளது. ஏற்காடு மலைகளில் பெய்யும் மழை நீர், மலைகளில் உருவாகும் ஊற்று நீரை கொண்டு உருவாகும் வேப்பாடி ஆறு, ஆணை மடுவு பகுதி யில் தேங்குகிறது. ஆண்டு முழுவதும் நீர்வரத்துள்ள ஆணை மடுவு பகுதியில், ஆங்கிலேயர்களால் சிறிய தடுப்பணை கட்டப்பட்டது. ஆணை மடுவு அணைக்கட்டும் திட்டத்தை செயல்படுத்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.கடந்த, 2004ல் அணை கட்ட ஆய்வுகள் நடந்தன. அதன் பிறகு, 20 ஆண்டுகளாக நடவடிக்கை எதுவும் இல்லை. மாவட்ட கலெக்டர் சாந்தி, தர்மபுரி, பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகியோர், கடந்தாண்டு ஆய்வு செய்தனர். ஆய்வோடு அப்பணி நின்று விட்டது. கடந்த சில தினங்களாக ஏற்காடு பகுதிகளில், பெய்த மழையால், ஆனைமடுவு பகுதிக்கு அதிகளவு தண்ணீர் வந்து, வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேப்பாடி ஆற்றில் அணைகள், அணைக்கட்டுகள், எதுவும் இல்லாததால் அங்கிருந்து பிரிந்து, பாம்பாற்றின் வழியாக சேலம் மாவட்டம், கே.என்.புதுார், ஆர்.எம்.நகர் ஏரிகளுக்கு சென்று ஏரிகள் நிரம்பி, தொப்பையாறு அணைக்கு செல்கிறது. இதனால், இந்த தர்மபுரி மாவட்ட மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை இல்லை. ஆகவே, ஆணைமடுவு வேப்பாடி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் பொம்மிடி, பில்பருத்தி துரிஞ்சிப்பட்டி, வாசிகவுண்டனுார், கேத்திரெட்டிப்பட்டி, ஜாலியூர், மணிபுரம், தாளநத்தம், அய்யம்பட்டி உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வாய்ப்பு உருவாகும். எனவே, ஆணை மடுவு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.