உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் நடமாடும் வாகனத்தில் விழிப்புணர்வு
பென்னாகரம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, புறவழிச்சாலை, தர்மபுரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தில் சென்று, உணவு பாதுகாப்புத்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், சேலம் பகுப்பாய்வு கூட இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினர், உணவு பொருட்களான தேயிலை, தேன், நெய், வறுத்த பச்சை பட்டாணி, சமையல் எண்ணெய், மிளகு, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் வீட்டளவிலே கலப்படம் கண்டறிதல் குறித்து விளக்கினர். பொட்டலம் இடப்பட்ட பாக்கெட் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்தும், நேரடியாக உணவு பொருட்களை கொண்டு செயல் விளக்கம் செய்தனர். மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தில் உள்ள எல்இ.டி., தொடுதிரை வாயிலாக உணவு பொருட்களில் கலப்படம் குறித்து, காணொலி காட்சிகள், பஸ் ஸ்டாண்டில் பயணிகள், பொது மக்கள், கடைக்காரர்கள் முன்பாக காண்பித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.