அரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்
அரூர்: அரூர் பகுதியில், நேற்று பெய்த கனமழையால், நீரோடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், நேற்று நள்ளிரவு, 12:30 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை கனமழை பெய்தது. இதனால், வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வரட்டாறு, வாணியாற்றில் நீர்வரத்து அதிகரித்ததுடன், அச்சல்வாடி, வாச்சாத்தி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள நீரோடைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு கிராமங்களில் ஏரிகள் நிரம்பி, அதன் உபரி நீர் அருகிலுள்ள வயல்களில் புகுந்ததால், அவை வெள்ளக்காடாக காட்சியளித்ததுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏற்கனவே, பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின்போது, பயிர்கள் சேதமடைந்த நிலையில், நேற்று மீண்டும், பெய்த கனமழையால் நெல், மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.