கேதார கவுரி விரதம் கோவிலில் வழிபாடு
தர்மபுரி, கோவில்களில், கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி, திரளான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.தீபாவளி பண்டிகையையொட்டி வரும், அமாவாசை தினத்தில், குடும்ப நன்மை மற்றும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, பெண்கள் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நேற்று ஐப்பசி மாத அமாவாசை தினத்தில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களிலும், கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில், திரளான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஒரு தட்டில், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு மற்றும் பூக்கள் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.