மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.37 லட்சம் பேட்டரி நாற்காலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற பின் அவர் கூறுகையில், 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும் பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வேண்டி, 405 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு, 4.37 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 3 சக்கர சைக்கிள் மற்றும் ஊன்றுகோலை கலெக்டர் சாந்தி வழங்கினார். இதில், டி.ஆர்.ஓ., கவிதா, தனித்துணை கலெக்டர் (சபாதி) சுப்பிரமணி, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.