வனத்திலுள்ள குட்டைகள் தொடர் மழையால் நிரம்பின
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அரூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால், கோட்டப்பட்டி, சிட்லிங், வாச்சாத்தி, கொளகம்பட்டி ஆகிய வனப்பகுதியிலுள்ள குட்டைகள் நிரம்பியுள்ளன. மேலும், சிறு, சிறு நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் தாழ்வான பகுதியிலுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மாம்பட்டி, கீரைப்பட்டி, பறையப்பட்டி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, மாம்பட்டி, தொட்டம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், கடந்த சில வாரங்களாக, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் விளை நிலங்களில் சாய்ந்துள்ளது. மேலும், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இயந்திரங்களை கொண்டு நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.