உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தோல் ஆலையில் இருவர் பலி உறவினர்கள் போராட்டம் : மாசு கட்டுப்பாடு வாரியம் "செக்

தோல் ஆலையில் இருவர் பலி உறவினர்கள் போராட்டம் : மாசு கட்டுப்பாடு வாரியம் "செக்

திண்டுக்கல் : திண்டுக்கல் தோல் தொழிற்சாலையில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் குட்டியபட்டி பிரிவு அருகே இப்ராகிம் என்பவரின் வி.எம்.ஐ., தோல் தொழிற்சாலை உள்ளது. இதே பகுதியை சேர்ந்த தங்கமணி, ராஜூ, நேற்று முன்தினம், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி இறந்தனர். உடலை தொட்டியில் இருந்து எடுக்கவிடாமல், நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் ரோடு மறியல் செய்தனர். டி.எஸ்.பி., சுருளி, இன்ஸ்பெக்டர் தெய்வம் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, பிரேத பரிசோதனைக்கு பிறகும், உடல்களை வாங்க மறுத்து, நேற்றும், மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். தோல் வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாலபாரதி எம்.எல்.ஏ., பேச்சு நடத்தினர். இதில், தலா மூன்று லட்ச ரூபாய் தர முடிவு செய்யப்பட்டு, போராட்டம் கைவிடப்பட்டது. ஆலை உரிமையாளர் இப்ராகிம் கைது செய்யப்பட்டார்.

ஆலைகளுக்கு 'செக்': ஆலையில் கழிவு நீர் தொட்டியை வாரம்தோறும் சுத்தம் செய்வது வழக்கம். அப்போது முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. மேலும், பல ஆலைகளில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது. இதனால் தொடர்ந்து விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விளக்கம் கேட்டுள்ளனர். நகரில் 45 ஆலைகள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுக்கின்றனரா, கழிவு நீரை சுத்திகரிக்கின்றனரா? என்பது குறித்தும், மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாடு பொறியாளர் ஜெயலட்சுமி கூறியது: ஆலையில் இரண்டு பேர் இறந்ததற்கான காரணம் குறித்தும், 45 தொழிற்சாலைகள் செயல்பாடு குறித்தும், சென்னைக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். உயர் அதிகாரிகள் தான், ஆலை மீது நடவடிக்கை எடுப்பர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை