அனுமதியற்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இருவர் பலி
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் மலையடிவாரத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்ட நிலையில் இங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த கண்ணன் 42, விஸ்வநத்தம் முனீஸ்வரன் 30 ,ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாயினர்.ஆவிச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் 48. இவர் இங்குள்ள மலையடிவாரம் பகுதியில் ெஷட் அமைத்து நாட்டு வெடிகள் பெயரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வருகிறார். இங்கு தீபாவளி பட்டாசுகள் ,பாறை வெடிப்பதற்கான நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர். இங்குள்ள கோடவுனில் தங்கி தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர்மாவட்டம் திருத்தங்கல் கண்ணன்(எ) சின்னன், விஸ்வநத்தம் முனீஸ்வரன் ஆகிய இரு தொழிலாளர்கள் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் வெடித்ததில் இருவரும் உடல் சிதறி பலியாகினர். இவர்களது தலை, கை, கால்கள் தனித்தனியே கிடந்தன. ஏ.டி.எஸ்.பி., முருகேசன், ஆர்.டி.ஓ., பால்பாண்டி, தாசில்தார் சரவணக்குமார் ,நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி பார்வையிட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். பலியான இருவருக்கும் முதல்வர் பொதுநிவாரண நிதி தலா ரூ. 3 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவிழா, தீபாவளி காலங்களில் ஆவிச்சிபட்டி, செந்துறை, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரம், காட்டுக்குள் சட்ட விரோதமாக பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் தயாரிப்பு சகஜமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விபத்தை மறைத்த உரிமையாளர்
இந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் 3:30 மணிக்கே வெடி விபத்து நடந்துள்ளது. இதன் உரிமையாளர் இறந்தவர்களின் சிதறி கிடந்த உடல் பாகங்களை சாக்கு மூடையில் கட்டி வைத்துள்ளார். இறந்தவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுத்து பிரச்னை வெளியில் தெரியாமல் இருக்க முயற்சி செய்து உள்ளார். இதனிடையே இது தொடர்பாக ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசாரும் நேற்று காலை வெடி விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் பலர் இருந்துள்ள நிலையில் ஆலையை விட்டு வெளியே ஓடியதால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.
நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு
சென்னை: திண்டுக்கல் மாவட்டம், ஆவிச்சிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.