| ADDED : மே 06, 2024 06:18 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.கொடைக்கானலில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் 'மே' யில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். இதை பார்க்க லட்சக் கணக்கான பயணிகள் வருகை தருவர். இதை தொடர்ந்து நடப்பாண்டு 61வது மலர் கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் மலர் படுகைகள் தயார் செய்து ஏராளமான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் பூங்கா நிர்வாகம் நாள்தோறும் நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட களப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது மலர்படுகையில் நடவு செய்யப்பட்டுள்ள கேலண்டுல்லா, பேன்சி, ஆஸ்டர், ஜினியா, பாப்பி, ஆப்பிரிக்கன் மேரி கோல்டு உள்ளிட்ட மலர்கள் பூத்துள்ளன. தற்போது பள்ளி விடுமுறை, கோடையை சமாளிக்க மலை நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்கு பூத்துள்ள பூக்களைரசித்துச் செல்கின்றனர்.