பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஹிந்து அறநிலைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக., 24) துவங்குகிறது. இதில் நீதிபதிகள், ஆதினங்கள், வெளிநாட்டினர் பங்கேற்பதுடன், 1300 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல் திட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்றான அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி இன்றும், நாளையும் (ஆக., 24, 25) இரண்டு நாட்களுக்கு பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது.
இன்று காலை 8:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதலுடன் அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம் எம்.எல்.ஏ., செந்தில் குமார் முன்னிலையில் மாநாடு துவங்குகிறது.இதில் மாநாட்டு அரங்கம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக்கண்காட்சி, 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் நடக்கும் ஐந்து ஆய்வரங்கங்களில் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். நீதிபதிகள், ஆதினங்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் விழா மலர், ஆய்வுக்கட்டுரை மலரும் வெளியிடப்பட உள்ளது.முருகன் கோயில் குறித்த 8 அலங்கார வளைவுகள், 100 அடி உயர கொடி, மலைக்கோயில் முகப்புடன் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.வாகனங்களுடன் கூடிய மருத்துவ முகாம்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கரநாற்காலிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க வருவோருக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநாட்டிற்கு வருவோருக்கு பஞ்சாமிர்தத்துடன் கூடிய பிரசாத பை வழங்கப்படவுள்ளது.