சுற்றுச்சூழலை பாதுகாத்து வெப்பநிலையை குறைக்க வீடுகள் தோறும் சென்று மரக்கன்றுகள் வழங்கி அதை நடவு செய்து பராமரிக்கின்றனர் பசுமை பழநி அமைப்பினர்.பழநி இந்திரா நகர், பழைய தாராபுரம் ரோடு, புது தாராபுரம் ரோடு, இட்டேரி ரோடு உள்ளிட்ட பகுதிகள் பழநியின் மையமாக உள்ளது. இங்கு நெருக்கமான குடியிருப்புகள் அதிகம் உள்ளன. பழநியில் வெயிலின் தாக்கம் வெப்பநிலையை அதிகரித்துள்ளது. இதை குறைக்கும் இயற்கை சக்தி மரங்கள் மட்டுமே. இதனால் பசுமை பழநி அமைப்பு சார்பில் பாதாம், வேங்கை, வாகை, நாவல், ஏல் இலை, மகாகனி, தேக்கு, மஞ்சக்கடம்பூ, அரசமரம், புங்கை, வேம்பு உள்ளிட்ட மர நாற்றுக்களை ஆறு மாதங்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டது. பின் அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்த மரக்கன்றுகளை 6வது வார்டில் வீடு தோறும் வழங்கி அவற்றை நடவு செய்துள்ளனர். முதல் கட்டமாக மரம் நடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் இவர்களிடம் மரக்கன்றுகளை இலவசமாக வாங்கி சென்று அவர்களுக்கு பிடித்த இடத்தில் நடவு செய்து பராமரிக்கின்றனர். இதுதான் தீர்வு
வீரமணி, கவுன்சிலர், பழநி: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை குறைக்க மரங்கள் மட்டுமே தீர்வு. தன்னார்வலர்கள் மூலம் மரக்கன்றுகளை பெறுகிறோம். 6வது வார்டில் உள்ள மக்களின் அனுமதி பெற்று அவர்கள் வீட்டின் அருகே மரங்களை நடவு செய்துள்ளோம். வீட்டின் வெளி சுவரை பாதிப்பது இல்லை. ஆனால் நகருக்கு தேவையான பிராண வாயுவை அதிக அளவில் வழங்குகிறது. மரங்களை பொதுமக்கள் பாதுகாக்கின்றனர். வீட்டிற்கு ஒரு மரம் வேண்டும்
கோகுல கிருஷ்ணன்,சமூக ஆர்வலர்,பழநி: பசுமை பழநி அமைப்பின் மூலம் பழநி நகரில் ஒவ்வொரு வார்டிலும் நுாற்றுக்கணக்கான மரங்கள் நட வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் நல்ல மரங்களை மட்டுமே விட்டுச் செல்ல முடியும். அவை தலைமுறையை சுகாதாரமாக சூழலில் வளர்க்கும். இயற்கை சூழலை பாதுகாப்போம். மரங்களை வளர்க்க விரும்புவர்களுக்கு வழங்குகிறோம். வனத்துறை சார்பிலும் மரங்கள் பெற்று வழங்கி வருகின்றோம் என்றார்.