உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் : பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம்,காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி, நரசிம்மர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது.நவாமரத்துப்பட்டிபுதுார் : ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பழநி: கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில் பழநி இடும்பன் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சன்னதி வீதி, வேளீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடந்தது.நத்தம்: கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூஜைகள் நடந்தது. கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. செண்பகவல்லி அம்மனுக்கு பக்தர்கள் நேற்று காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது.கோபால்பட்டி: கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயிலில் பூஜை நடந்தது. இதைப்போலவே சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக பூஜைகளும், தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சாணார்பட்டி காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ