உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொசவன்குட்டில் 20 ஆண்டுகளாக இல்லை ரோடு

கொசவன்குட்டில் 20 ஆண்டுகளாக இல்லை ரோடு

நத்தம் : நத்தம் அருகே பூதகுடி ஊராட்சி கொசவன்குட்டு கிராமத்தில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்காததால் சேதமான சாலையில் பயணிக்க முடியாமல் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட கொசவன்குட்டு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை முற்றிலும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. சேதமடைந்த சாலை நாளுக்கு நாள் மேலும் சேதகமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி செல்லும் மாணவர்கள் ,கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் தினமும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். டூவீலர்களில் பயணிப்பவர்கள் அடிக்கடி சாலையில் பெயர்ந்துள்ள கற்களால் கீழே விழுந்து காயத்துடன் எழுந்து செல்லும் அவலம் உள்ளது. சிறுவர்கள் கால்களில் காயம் அடைந்து அவதிப்பட்டு வருவதால் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஷ்டத்தை அனுபவிக்கிறோம்

குமார், விவசாயி, பூதகுடி: விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் இங்கு மா, தென்னை, புளி உள்ளிட்ட விவசாய பொருட்கள் அதிக அளவு விளைகிறது. பல ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் உள்ள எங்கள் கிராம சாலையை இன்னும் சீரமைக்காததால் விவசாய விலை பொருட்கள் கொண்டு செல்ல கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம். இந்த சாலையில் பயணித்தால் வாகனம் சீக்கிரமாக பழுதாகிவிடும் எனக்கூறி பொருட்களை ஏற்றிச்செல்ல வாடகை வண்டிக்காரர்கள் வர மறுக்கின்றனர். இதனால் டூவீலர்களில் சிரமப்பட்டு கொண்டு சென்று கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்.

ஊராட்சி தலைவரும் கண்டுக்கல

வெள்ளைச்சாமி, கூலித் தொழிலாளி ,பூதகுடி: பொதுமக்கள் அவசர காலத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஆட்டோக்கள் கூட வருவதற்கு சாலை வசதி இல்லாததால், உடல்நிலை சரி இல்லாதவர்களை அரை கிலோ மீட்டர் துாரம் சுமந்து சென்று பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. 20 ஆண்டுகளாக சேதமான நிலையில் உள்ள சாலையை புதுப்பிக்க ஊராட்சி தலைவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

கண்டு கொள்வதில்லை

நாகராஜ், விவசாயி, பூதகுடி: பூதகுடி ஊராட்சி மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் வந்து சேர்வதில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் கால் நுாற்றாண்டாக சேதமான சாலையில் பயணித்து பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறோம். எங்கள் கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் தினமும் சேதமான சாலையால் கஷ்டப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகமதான் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்