| ADDED : ஜூன் 14, 2024 07:25 AM
மாவட்டத்தை பொருத்தமட்டில் விவசாயமே பிரதானமாகும். இங்குள்ள கிராம பகுதிகளுக்கு தனியார் பஸ்களை காட்டிலும் அரசு பஸ்களே ஏராளமாக இயக்கப்படுகிறது. சில மாதங்களாகவே பல்வேறு பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதாகி நிற்பதும் பயணிகள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. அரசு பஸ்கள் ஆயுட்காலத்தை நிறைவு செய்து காலாவதியான நிலையிலே மேக்கப் போடப்பட்டு இயக்கப்படுகிறது.ஓட்டை உடைசலான பஸ்களில் பயணிக்கும் பயணிகள் காதை பிளக்கும் சப்தத்துடன் பெரும் அவதிக்கு மத்தியில் செல்கின்றனர். கூரை சேதம் ,ரேடியேட்டர், பிரேக், இஞ்ஜின் பழுது என பாதி வழியில் நிற்கும் போக்கு உள்ளது. கொடைக்கானல், தாண்டிக்குடி , பூலத்துார் ,சிறுமலை, ஆடலுார், பாச்சலுார், நத்தம் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் அவ்வப்போது பழுதாகி நிற்கும் அவலம் நாள்தோறும் தொடர்கிறது.பெரும்பாலான தனியார் பஸ்களும் டிரிப் கட் செய்வதால் பயணிகள் தாங்கள் பயணிக்கும் பகுதிக்கு பெரும் பொருட் செலவில் தனி வாகனங்களை அமர்த்தி செல்லும் நிலை உள்ளது. பெண்களுக்கு டவுன் பஸ்கள் இலவசம் என்ற நிலையில் அவர்களும் அவதிப்படுகின்றனர். இது போன்ற அசாதாரண நிலை தொடர்வதால் பஸ்களை இயக்கும் ஊழியர்களும் சிரமப்படுகின்றனர். இயக்கப்படும் பஸ்களில் உள்ள பழுதுகளை அதிகாரியிடம் தெரிவித்த போதும், அதற்கு போதுமான உதிரி பாகங்கள் இல்லாததால் வேறு வழியின்றி தள்ளு மாடல் வண்டிகளாக பராமரிக்கின்றனர். மாவட்டத்தில் இயக்கப்படும் பழுதான அரசு பஸ்களை தவிர்த்து புதிய பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.