திண்டுக்கல்லில் குற்றங்களை தடுக்க 220 கண்காணிப்பு கேமராக்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் நடக்கும் வழிப்பறி,திருட்டு போன்ற தொடர் குற்றங்களை தடுக்க 220 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் நகரில் சில நாட்களாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் நடப்பது அதிகரித்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் இரவில் வெளியில் வருவதற்கு அச்சமடைந்து தங்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. டிச.5ல் திண்டுக்கல் நகரை சேர்ந்த லாவண்யா,என்பவர் இரவு 7:00 மணிக்கு திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சென்றார். மீண்டும் திரும்பி வீட்டிற்கு நடந்து வரும் போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் அலைபேசியை பறித்து சென்றனர். திண்டுக்கல் கிரைம் டீம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் முகம் தெளிவாக தெரியாததால் அவர்களை பிடிக்க காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகரில் உள்ள எல்லா பகுதிகளிலும் உள்ள முக்கிய இடங்களில் புதிதாக 220 கண்காணிப்பு கேமராக்களை அமைக்க எஸ்.பி.,பிரதீப் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் நகரில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து சேதமான கேமராக்களையும் சீரமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர்.