வழித்தட அறிவிப்பு இல்லாத அரசு டவுன் பஸ்கள் நிறம், எக்ஸ்பிரஸ் ஸ்டிக்கர்களால் குழப்பத்தில் பயணிகள்
கன்னிவாடி: திண்டுக்கல் -கன்னிவாடி இடையே 6 வெவ்வேறு தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும் நிலையில் வழித்தட அறிவிப்பு இல்லாத, எக்ஸ்பிரஸ் ஸ்டிக்கருடன் இயங்கும் புறநகர் பஸ்கள் பயணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்கு, ரெட்டியார்சத்திரம், எம்.அம்மாபட்டி, மாங்கரை, குட்டத்துப்பட்டி, அலவாச்சிபட்டி, கசவனம்பட்டி, உள்ளிட்ட தடங்களில் அரசு, தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் அரசு டவுன் பஸ்களுக்கு பதிலாக பச்சை நிற (புறநகர் இயக்கத்திற்கான) பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் நகர பஸ் என்பதற்கான அறிவிப்போ, வழித்தட கிராமங்கள் குறித்த தெளிவான போர்டுகள் பயன்படுத்துவது இல்லை. சில பஸ்களில் எக்ஸ்பிரஸ் என்ற அறிவிப்புடன் தெளிவற்ற போர்டு அமைத்து இயக்கப்படுகிறது. வழியோர கிராம பஸ் ஸ்டாப்களில் காத்திருக்கும் பயணிகள் அவற்றை புறநகர் பஸ்கள் என தவறவிடும் அவல நிலை உள்ளது. வெகுநேர காத்திருப்பு, அலைக்கழிப்பு போன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சந்துரு கூறியதாவது: 6 வழித்தடங்களில் உள்ள 50க்கு மேற்பட்ட கிராம மாணவர்கள், மகளிர், கூலி தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசு டவுன் பஸ்களின் சேவையை நம்பி உள்ளனர். தனியார் பஸ் சேவை இல்லாத மாங்கரை, குட்டத்துப்பட்டி தடங்களில் இச்சேவை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் குழப்பமற்ற நிலையில் அரசு டவுன் பஸ்களை இயக்குவதில் அலட்சியம் காட்டுகின்றனர். அரசு டவுன் பஸ்களுக்கு மாற்றாக பச்சை நிறம் (புறநகர் பஸ்களில் இடம்பெறுவது) சில நேரங்களில் பழநி, திருச்சி, தேனி என்ற அறிவிப்பு கொண்ட பஸ்கள் குழப்பத்தை அதிகரித்து பயணிகளை அவதிக்குள்ளாக்கி வருகின்றன. திண்டுக்கல்லில் நகரை சுற்றி வரவேண்டிய 7, 8ம் எண் வழித்தட தனியார் பஸ்கள் மட்டுமே வழக்கமான மேற்கு தாலுகா அலுவலக ரோட்டில் இயங்குகிறது என்றார்.