செங்கல் சேம்பரில் வாலிபரை வடமாநிலத்தவர் கொன்றனரா?
பழனி:செங்கல் சூளை சேம்பரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தொப்பம்பட்டி அருகே தும்பலப்பட்டியில் தனியார் செங்கல் சூளை சேம்பரில், அப்பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன், 23, கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்த சேம்பரில் வட மாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி நிமித்தமாக சேம்பருக்கு சென்ற சரவணன், வெகு நேரமாக திரும்பி வரவில்லை. சேம்பருக்கு சென்றவர்கள் அவர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அவரது குடும்பத்தினருக்கும், கீரனுார் போலீசாருக்கும் தெரிவித்தனர். அப்போது, அங்கு திரண்ட உறவினர்கள், சேம்பரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் சம்பள பிரச்னை காரணமாக சரவணனை கொன்று விட்டதாக கூறி, உடலை எடுத்துச் செல்ல விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழனி - தாராபுரம் மெயின் ரோட்டில் மறியலிலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தி, உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.