கொடையில் மயங்கி கிடக்கும் குடி மகன்கள் சுற்றுலா பயணிகள் முகம் சுளிப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆங்காங்கு குடிபோதையில் மயங்கும் நபர்களால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இங்குவருகை தருவோர் மனதை பாதிக்கும் வகையில் பஸ் ஸ்டாண்ட், அண்ணா சாலை, உட்வில் ரோடு, கிளப் ரோடு, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், டிப்போ, ஏரிசாலை பகுதிகளில் குடிபோதையில் தன்னிலை மறந்து மயங்கி கிடக்கும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் அரை நிர்வாண நிலை, இயற்கை உபாதை புரிதல், அநாகரிகமாக பேசுதல் உள்ளிட்ட செயல்களால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இங்கு உள்ள டாஸ்மாக் பார்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் இதை தவிர்க்க ரோட்டோரங்களை குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் போக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இவர்கள் வீசி செல்லும் உணவு பொட்டலங்கள், மது பாட்டில் என நகரின் குப்பைக்கு இவர்கள் காரணமாக உள்ளனர். இங்கு செயல்படும் டாஸ்மாக் பார்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாத நிலை, விலை பட்டியல் குறித்து அதிகாரிகள் யாரும் கவனம் செலுத்தாத நிலை உள்ளது.சுற்றுலா நகரின் மாண்பை காக்க இனியாவது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.