கொடை யில் புற்றீசலாக பெருகும் ஆக்கிரமிப்பு கடைகள்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
கொடைக்கானல்: - கொடைக்கானல் நகரில் புற்றீசல் போல் பெருகி வரும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது மவுனம் காத்து வருகின்றனர். கொடைக்கானலில் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இடங்களை ஆக்கிரமித்து வணிக ரீதியான கடைகள் சமீபமாக கட்டமைக்கப்படுகிறது. பர்னியல் ரோடு மற்றும் தமிழ்நாடு சுற்றுலா விடுதி அருகே சில மாதமாக காலி இடத்தில் ரோட்டோரம் வர்த்தக ரீதியான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சியினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். முழு கட்டமைப்பையும் அரங்கேற்றி மின் இணைப்பு வரை சென்றுள்ளது. இதுபோல் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை ரோட்டோர கடைகள் ஏராளமாக உருவாகியுள்ளன. பெயரளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றம் அவ்வப்போது அரங்கேறுவது, பின் கண்டு கொள்ளாது போக்கு தொடர்கிறது. ஆளும்கட்சியினரின் ஆதரவே இதற்கு காரணமாக உள்ளது. சாமானியர்கள் மீது பாயும் அதிகாரிகள் நடவடிக்கை, அரசியல், பண பலம் படைத்தவர்களிடம் எடுபடாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.