குடும்ப பிரச்னையில் விஷம் குடித்த தந்தை பலி: மகளுக்கு சிகிச்சை
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பாலில் விஷம் கலந்து குடித்ததில் தந்தை பலியானார். மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவை மாறுபட்டதால் அதனை குடிக்காத மகன் உயிர் தப்பினார். ஒட்டன்சத்திரம் திடீர் நகரை சேர்ந்த லாரி டிரைவர் செல்லப்பாண்டி 40. இவரது மனைவி சுபா , சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவர்களுக்கு மகள் ஸ்ரீமதி 16, மகன் லோகேஷ் 13, உள்ளனர். இருவரும் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் செல்லப்பாண்டி கோவை சென்று மகள், மகனை கோயிலுக்கு செல்லலாம் எனக்கூறி ஒட்டன்சத்திரம் அழைத்து வந்தார். நேற்று வீட்டில் மகள் , மகனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு பின்னர் அவரும் குடித்தார். லோகேஷ் பாலின் சுவை வேறுபாடாக இருந்ததால் குடிக்காமல் வைத்து விட்டார். சிறிது நேரத்தில் செல்லப்பாண்டி இறந்தார். அதனை குடித்த ஸ்ரீமதி ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.