புறநகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் அவசியம்! விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க
தென் மாவட்டங்களில் நுழைவுப்பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளதோடு பழநி, கொடைக்கானல் என ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளதால் வெளிமாநில, மாவட்ட என பொதுமக்களின் போக்குவரத்து வருகை அதிகம் உள்ளது. ஒட்டன்சத்திரம், - கோவை , திருச்சி, மதுரை, கரூர் அனைத்து பகுதிகளுக்கும் வந்து செல்வதற்கான நெடுஞ்சாலைகளும் இங்கு உள்ளன. தேனி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை என பல்வேறு நகரங்களை இணைக்கும் முக்கிய ரோடுகளும் உள்ளன. இந்த ரோடுகளில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.அதற்கேற்ப அனுதினமும் விபத்துகளும் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பாக நத்தம் - - மதுரை ரோடு, திண்டுக்கல்- திருச்சி ரோடு, கோவிலுர் பிரிவு, வடமதுரை, வேடசந்துார் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பல விபத்துகள் நடந்து உயிர் பலிகள் அதிகரித்துள்ளன. இரவில் பயணிக்கும் கார், லாரி, டூவீலர்கள் முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயலும் போது எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. விபத்து ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டுமென்றால் திண்டுக்கல் நகரின் மையப்பகுதிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கே கொண்டு சென்றாலும், பொருளாதார நெருக்கடியால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. எனவே புறநகர் பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அவசர முதலுதவி சிகிச்சையளித்தால் உயிரிழப்பு அதிகமாவதை குறைக்க முடியும் என்பதால் இது தற்போதை கட்டாய தேவையாக இருக்கிறது.