கல்லுாரிகளில் உதவி மையம் மாணவர்கள் குறை தீர்க்க ஏற்பாடு
சென்னை : 'உயர் கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உதவும் வகையில், உதவி மற்றும் குறை தீர்வு மையங்கள் அமைக்க வேண்டும்' என, உயர் கல்வித்துறை செயலர் கோபால் உத்தரவிட்டுள்ளார்.தமிழக உயர் கல்வித்துறையின் கீழ், 13 பல்கலைகள், 10 அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், 52 அரசு பாலிடெக்னிக்குகள், சிறப்பு கல்வியகங்கள், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள், ஏழு கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மேலும், அரசு உதவி பெறும் கலை அறிவியல், இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளும் உள்ளன. அவற்றில் கல்வி திட்டங்கள், சேர்க்கை குறித்த தகவல்களை பெறுவதற்கும், மாணவர்களுக்கான குறைகளை தெரிவிக்கவும், போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இதுகுறித்து, உயர் கல்வித்துறை செயலர் கோபால் கூறியதாவது:அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட உதவி மையங்கள் அமைக்க வேண்டும். அவை மாணவர், பெற்றோர், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அந்த மையம், கல்வி வளாகத்தின் முதன்மையான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். 'உதவி மையம்' என்ற பெயர் பலகையும் இருக்க வேண்டும். சரியான நபர்களிடம் இருந்து, சரியான தகவல்களை பெற்று, உரியவருக்கு விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் குறைகளுக்கு தீர்வளிக்கவும், அனைத்து துறைகள் உடனான, 'இன்டர்காம்' வசதியுடன் இருக்க வேண்டும். வேலை நேரம் முழுதும் திறந்திருக்க வேண்டும். 'ஆன்லைன்' வாயிலாக தொடர்பு கொள்ள எளிதாக இருக்க வேண்டும். இவற்றை உடனே அமைத்து, மாநில உயர் கல்வி மன்றத்துக்கு தவகல் தெரிவிக்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதுகுறித்து, அனைத்து பல்கலை பதிவாளர்கள், கல்லுாரி கல்வி இயக்குனரக ஆணையர், தொழில்நுட்ப கல்வி கமிஷனர், உயர் கல்வி மன்ற துணைத்தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.