நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா -பூப்பல்லக்கு விடிய, விடிய நடந்த நகர்வலத்தில் பக்தர்கள் தரிசனம்
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை யொட்டி நடந்த -பூப்பல்லக்கு விடிய, விடிய நகர்வலம் வர அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.இக்கோயில் மாசி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர். இதை தொடர்ந்து வெள்ளி ,செவ்வாய்கிழமை இரவில் வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் அம்மன் மின் ரதத்தில் எழுந்தருள நகர்வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவில் அம்மனுக்கு மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பூக்குழியிலும் இறங்கினர். நேற்று முன்தினம் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். அம்மன்குளத்திலிருந்து புறப்பட்ட பல்லக்கு முக்கிய வீதிகள் வழியாக வந்தது. விடிய விடிய நடந்த இதில் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் நின்றப்படி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களை நேர்த்திக்கடன்களை பெற்றுக் கொண்ட அம்மன் கோயிலுக்கு சென்றார்.