மேலும் செய்திகள்
எம்.ஆர்.பி. செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
15-Oct-2024
திண்டுக்கல்: தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை அரசு பறித்துள்ளதால் தொடர் போராட்டம் நடத்த எம்.ஆர்.பி., செவிலியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.,) மூலம் மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி பணியாற்றும் செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாததால் 2021 ல் எம்.ஆர்.பி., செவிலியர்களின் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஊதியத்துடன் கூடி மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது.அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் மறுக்கப்பட்டுள்ளதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியத்தையும் திரும்ப செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எம்.ஆர்.பி., செவிலியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பொருளாதார சூழல் கருதி கைக்குழந்தைகளோடு வந்து பணியாற்றும் நிலையும் நீடிக்கிறது. தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாமல் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொதுச்செயலர் சுபின் கூறியதாவது: 2015ல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7243 செவிலியர்களில் இதுவரை 6000 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.நோயாளிகள் செவிலியர் விகிதாசாரப்படி தமிழக முழுவதும் 23 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். எம்.ஆர்.பி. செவிலியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க நேரிடும்போது ஊதியம் வழங்குவதில்லை. இது தொடர்பாக தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம் என்றார்.
15-Oct-2024