சிறுவர்களை கடத்தியதாக தகவல் பள்ளியில் குவிந்த பெற்றோர்
வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்த சிறுவர்களை சிலர் கடத்தி சென்றதாக தகவல் பரவியதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பெற்றோர் குவிந்தனர்.இப்பள்ளியில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவரை டூவீலரில் வந்த சிலர் கடத்த முயன்றதாகவும் அவர்களிடமிருந்து மாணவர் தப்பித்து வந்ததாக தகவல் பரவியது.இது போல் நேற்று காலையிலும் ஆம்னி வேனில் வந்த சிலர் மாணவர்களை கடத்த முயன்றதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் குவிந்தனர்.பெற்றோர் கூறுகையில், ' கடத்தும் முயற்சியில் கும்பல் ஒன்று ஈடுபட்டதாக பிள்ளைகளிடம் விசாரித்தபோது தெரியவந்தது. கடத்தல் கும்பல் தொடர்பாக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதன் பின் பெற்றோர் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.கடத்தல் முயற்சி குறித்து நிலக்கோட்டை போலீசார், தாசில்தார் விஜயலட்சுமி விசாரணை நடத்தினர்.