கடும் அதிர்வுடன்வெடி சத்தம் 7 ஆண்டுகளாக பீதியில் மக்கள்
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியில் நேற்று மதியம் 1:45, 1:47 மணி என இருமுறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வீடுகளில் கடும் அதிர்வும் உணரப்பட்ட நிலையில் கால்நடைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தன.வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில் அவ்வப்போது பயங்கர வெடிச்சத்தம் கேட்பது ஏழு ஆண்டுகளாக தொடர்கிறது. கடும் அதிர்வும் உணரப்படுகிறது.வெடிச்சத்தம் கேட்ட பின், சில நேரங்களில் பயிற்சி விமானங்கள் பறந்து செல்கின்றன. பல நேரங்களில் விமானங்கள் பறப்பது குறித்து அறிகுறி ஏதும் இருப்பதில்லை. நேற்று மதியம் 1:45 மணிக்கு இரு நிமிடங்கள் இடைவெளியில் இருமுறை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.அப்போது வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கணக்கான கிராமங்களில் கடும் அதிர்வும் உணரப்பட்டது. கால்நடைகள் அலறியடித்து ஓடின. அடுத்த நிமிடங்களில் பயிற்சி விமானமும் பறந்து சென்றது. இந்தாண்டில் மட்டும் வெடிச்சத்தம் கேட்பது இது ஏழாவது முறை. மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால், ஆய்வு நடக்கிறது என பல ஆண்டுகளாக ஒரே பதில் தரப்படுகிறது. ஆய்வு முடிவும் வந்தபாடில்லை. வெடிச்சத்தத்திற்கான காரணம் குறித்து அரசு விளக்கமளித்தால் மக்கள் நிம்மதியாக இருப்பர்.