காய்ந்து போன மானாவரி பயிர்களுக்கு இழப்பீடு வழங்குங்க ; மழை இல்லாமல் தொடரும் பாதிப்புகள்
மாவட்டத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியை நிஜமாக்கும் விதமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவரி விவசாயமாக நிலக்கடலை, எள்ளு, கம்பு, சோளம் தட்டை பயிறு உள்ளிட்ட பயிர் வகைகளை பயிரிட்டனர். பயிர்கள் நன்கு வளர துவங்கியது. ஆடியை தொடர்ந்து வந்த ஆவணியில் மழை அறவே இல்லை. தற்போது புரட்டாசி பிறந்து ஒரு வாரம் ஆக உள்ள நிலையில் இன்னும் மழை இல்லை. இதனால் பயிர்கள் பயிரிட்டு 40 நாட்களைக் கடந்தும் மழை இல்லாததால் நன்கு வளர்ந்த பயிர்கள் முழுவதுமாக காயத் துவங்கி உள்ளன. 2 அடி உயரம் வளர்ந்து இருக்க வேண்டிய எள் செடிகள், அரை அடி உயரம் வளர்ந்துள்ளன. கடலை செடி பூ எடுத்து உள்ளது. ஆனால் மழை,ஈரப்பதம் இல்லாததால்,மகசூலுக்கு வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மானாவாரி விவசாயமாக இருந்தாலும் ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, பயிரிட்டு, கலை எடுத்து உரங்கள் தெளித்து பயிரை வளர்த்த விவசாயிகள் தற்போது கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னையால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.